×

ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன் சரமாரி கத்தியால் குத்தி கொலை: பட்டதாரி வாலிபருக்கு வலை

ஸ்ரீமுஷ்ணம்: ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவனை, பட்டதாரி வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இவரது மகன் ஜீவா(17) விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளில் பிளஸ் 2 படித்து வந்தார். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வதற்காக நேற்று காலை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தவர், பெலாந்துரை வாய்க்கால் அருகில் சிறுநீர் கழிக்க சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆனந்த்(22) பின் தொடர்ந்து வந்து ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற நண்பர் பிரத்தீஷ்ராஜிக்கும் சில இடங்களில் லேசான கத்திக்குத்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜீவாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், அதே பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஆனந்த் (22), பெண்ணாடம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஜீவா நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டுக்கு ஜீவாவை அழைத்து சென்று ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தினாராம். இதற்கு அவர் இணங்க மறுத்து கடுமையாக திட்டி விட்டு சென்றாராம். இதனால் ஒரு பெண்ணை ஜீவாவுடன் தொடர்புபடுத்தி ஆனந்த் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பறித்து உடைத்துள்ளார். மேலும் ஓரினசேர்க்கை குறித்து ஆனந்தின் குடும்பத்தினரிடம் ஜீவா புகார் கூறியுள்ளார். இதனால் அவமானமடைந்த ஆனந்த், பழிவாங்குவதற்காக ஜீவாவை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன் சரமாரி கத்தியால் குத்தி கொலை: பட்டதாரி வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Srimushnam ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!