×

இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, துறை அதிகாரிகளுடன் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, பணிகள் எவ்வளவு விரைவாக முடிக்கப்படும் என ஒப்பந்ததாரர்களுடன், அதிகாரிகளுடன் கலந்தாக ஆலோசித்தார். இதனை அடுத்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள, அதோடு 3 அணுகு சாலைகளை அமைக்கும் பணி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளைவு அமைக்கின்ற பணி பேருந்து நிலையத்தில், காவல் நிலையம் அமைக்க வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். 2013-இல் கிளாம்பாக்கம் பேருந்து முனையும் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், 2019-ல் துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தான், 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் திட்டமிடப்பட்டிருந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை, ஒவ்வொரு பகுதிகளிலும் பயணம் செய்ய இருக்கின்ற பயணிகளுக்கு தேவைப்படுகின்ற, அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து, கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தியதால், சுமார் 70 கோடி ரூபாய் அளவிற்கு, புதிதாக அமைந்த ஆட்சியின் பிறகு தான் திட்டமிடும் பணிகள் நடைபெற்றது. திட்டமிடாமல் துவங்கப்பட்ட பணி என்பதாலேயே காலதாமதம் ஏற்பட்டது.

இடையில் இயற்கை சீற்றம், பருவ மழை உள்ளிட்டவற்றையும் சமாளித்து பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும். அக்டோபருக்குள் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த வடிகால் அமைக்கும் பணியானது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, போர்க்கால அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதிவிரைவாக பணிகளை முடிக்க முடியுமோ, அதற்கான தொழில்நுட்பங்கள் சாத்தியக்கூறுகளை, ஆராய்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார் .

The post இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Klambakkam bus station ,Minister ,Zegarbabu ,Chennai ,Seagarbapu ,Clambakam Artist Century ,Clambakkam Bus Station ,SegarBabu ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...