வாஷிங்டன் : ஆன்லைன் வர்த்தக நடைமுறைக்கான சட்ட விதிகளை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.ஆன்லைன் விற்பனை சந்தையில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் மீது அமெரிக்காவின் கூட்டாட்சி வர்த்தக ஆணையம் இந்த வழக்கை தொடுத்துள்ளது. அமேசான் தங்களது விற்பனை தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் ஆதிக்கம் செலுத்தி லாபம் அடைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் பல விற்பனையாளர்களின் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் போது, தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை அமேசான் முன்னிலைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் மற்ற விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பொருளை அமேசான் தமது சொந்த தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் அதிக விலைக்கு விற்றதாகவும் அமெரிக்காவின் கூட்டாட்சி வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் 17 மாநில அட்டர்னி ஜெனெரல்கள் இணைந்து 4 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அமேசானின் வர்த்தக விதிமீறல்களுக்கு நீதிமன்றம் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் கூட்டாட்சி வர்த்தக ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல இணைய தேடுபொறி சந்தையில் போட்டியாளர்களை பின்னுக்கு தள்ள சட்ட விதிகளை மீறியதாக கூகுள் மீதும் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆன்லைன் வர்த்தக நடைமுறைக்கான சட்ட விதிகளை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வழக்கு!! appeared first on Dinakaran.