×

மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில், நேற்று முன்தினம் மாலை இடி மின்னலுடன் பெய்த கன மழையால் அங்குள்ள வயல்வெளி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த அஞ்சலிதேவி (45) என்பவரின் பசு மாடு மேய்ச்சலுக்கு செல்லும்போது மின் கம்பியில் மிதித்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில், மாட்டை தேடிபோன அஞ்சலிதேவியையும் மின்சாரம் தாக்கி உள்ளது.

இதில், அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் அழுது சத்தம் போட்டதை கேட்ட ஊர் பொதுமக்கள் மின்சார டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த ஊராட்சி மன்றத்தின் துணை தலைவர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர் மற்றும் மின்வாரிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார். பின்பு, அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இந்த பசு மாட்டை வாழ்வாதாரமாக வளர்த்து வந்த அஞ்சலிதேவிக்கு, வருவாய் துறையினர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Vellaputhur Panchayat ,Achirubakkam Union ,Maduraandakam ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்