×

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு r20 கோடியில் கூடுதல் கட்டிடம்

*ஆய்வகம் உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்கும்

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை பிரிவுக்கான கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் ரூ.100 கோடி மதிப்பில் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 100 பேர் வீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

5 ஆண்டு படிப்புக்கு மொத்தம் 500 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.விவசாயம் சார்ந்த திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டதன் காரணமாக இந்த மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் இந்த மருத்துவ கல்லூரியை தேர்வு செய்து படித்து வருகின்றனர். மேலும் கல்லூரியை ஒட்டியவாறு ஒரே வளாகத்தில் விடுதி மற்றும் மருத்துவமனையும் இயங்கி வருவது இக்கல்லூரிக்கு உரிய சிறப்பாகும்.

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1,300 பேர் வரை வெளி நோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை எவ்வித பராமரிப்புமின்றி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிசிச்சை பிரிவுகளில் தற்போது இட நெருக்கடி இருந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டும், நோயாளிகள் நலன் கருதியும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம் அருகே ரூ.20 கோடி மதிப்பில் 50 படுக்கைகளுடன் கூடிய கீழ்தளம், மேல்தளம் என புதிய கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது கட்டுமான இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தலா 22 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவு வீதம் மொத்தம் 45 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் மருத்துவ ஆய்வகம் உள்பட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க,ஸ்டாலினுக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு r20 கோடியில் கூடுதல் கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Government Medical College Hospital Emergency Treatment Unit ,Thiruvarur ,Government Medical College Hospital ,Campus ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...