×

அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

அன்னூர் : கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் வான்மதி (21). இவர் கடந்தாண்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்போதைய கோவை வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது வரை நிவாரணம் எதுவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. ஆர்டிஓ விசாரணை அறிக்கையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டி உயிரிழந்த வான்மதியின் தாய், பாட்டி, வான்மதியின் குழந்தை மற்றும் உறவினர்கள் என 10 பேர் நேற்று திடீரென அன்னூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரமாக இந்த போராட்டம் நீடித்தது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அன்னூர் வட்டாட்சியர் காந்திமதி, மேட்டுப்பாளையம் (அன்னூர் பொறுப்பு) காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் சுமார் 20 நிமிடங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அன்னூர் வட்டாட்சியர் காந்திமதியிடம், ‘‘உயிரிழந்த வான்மதியின் ஆர்டிஓ விசாரணை அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை. சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த புகாரின் நிலை என்ன? இதுவரை அரசு மூலமாக வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவி வான்மதியின் குழந்தைக்கு வழங்கப்படவில்லை’’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அவர்களுடன் பேசிய வட்டாட்சியர் காந்திமதி, ‘‘இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

The post அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Annoor Government Hospital ,Annur: Vanmati ,Annur Kumarapalayam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...