×

மஞ்சூர் தாய்சோலா சாலையோரத்தில் தடுப்பு அமைக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை

 

மஞ்சூர்,செப்.26: மஞ்சூர் தாய்சோலா சாைலயில் புலிசோலை பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் சாலையோர தடுப்பு அமைக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா.கிண்ணக்கொரை,இரியசீகை,கோரகுந்தா,அப்பர்பவானி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள்,தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் தாய்சோலா வழியாகதான் சென்று வரவேண்டும்.

வாகனப்போக்குவரத்து மிகுந்த இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதுடன் கொண்டை ஊசி வளைவுகளுடன் மிக குறுகிய சாலையாக உள்ளது. இந்நிலையில் மேல்குந்தா முதல் கிண்ணக்கொரை வரை சாலையின் பல இடங்களிலும் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் இல்லாதநிலை உள்ளது. இதனால் இவ்வழியாக இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் இயக்க வேண்டியநிலை உள்ளது. குறிப்பாக இந்த சாலையில் புலிசோலை என்ற இடத்தில் சாலை வளைவாகவும் மிகவும் குறுகியதாக உள்ளதுடன் ஒருபுறம் பெரிய பள்ளம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் சாலையோர தடுப்பு இல்லாததால் வாகனங்களை குறிப்பாக கனரக வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இப்பகுதியில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது இடப்பற்றாகுறையால் தவறி பள்ளத்தில் விழுகின்றனர். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் முன் அப்பகுதியில் சாலையோரத்தில் தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

The post மஞ்சூர் தாய்சோலா சாலையோரத்தில் தடுப்பு அமைக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manjur Thaisola ,Manjoor ,Pulisolai ,Manjoor Thaisola ,Dinakaran ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை