×

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பு: நினைவூட்டல் கடிதம் அளித்தனர்

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று திடீரென தலைமை செயலகம் வந்து, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து நினைவூட்டல் கடிதம் அளித்தனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பை திருமங்கலம் அதிமுக எம்எல்ஏவான ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிமுகவின் கோரிக்கை குறித்து, பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றம் வருகிற அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது. இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், சு.ரவி, பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், தளவாய் சுந்தரம், மரகதம் குமரவேல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று காலை திடீரென சென்னை, தலைமை செயலகம் வந்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து, அவரிடம் ஒரு நினைவூட்டல் கடிதம் அளித்தனர்.

அதில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அதிமுக எம்எல்ஏக்கள் தேர்வு செய்து, தங்களிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபற்றி பலமுறை தங்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்துக்கு முன்னதாக ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கி, அவரது இருக்கையையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

* கடிதம் மூலம் பதில் வேண்டும்
தலைமை செயலக வளாகத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் குறித்து 3 முறை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் பரிசீலித்து முடிவு செய்வதாக கூறுகிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தற்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை இன்று (நேற்று) சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கியுள்ளோம். அவரிடம், எங்கள் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்குவீர்களா, வழங்க மாட்டீர்களா என்று கடிதம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். சபாநாயகரிடம் இருந்து பதில் வந்த பிறகு முன்னாள் முதல்வர் எடப்பாடியிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பு: நினைவூட்டல் கடிதம் அளித்தனர் appeared first on Dinakaran.

Tags : Assembly Opposition ,AIADMK MLAs ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Deputy Leader ,RB ,Udayakumar ,
× RELATED செங்கோல் விவகாரம் : ஒன்றிய அரசு நாடகம்: எடப்பாடி பேட்டி