- அம்பேத்கர்
- திருவள்ளுவர்
- விஸ்வ இந்து பரிஷத்
- Manian
- சென்னை
- முன்னாள்
- துணை ஜனாதிபதி
- விஸ்வ ஹிந்து பரிஷத் RBVS
- தின மலர்
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். சென்னை தி.நகரில் கடந்த 11ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, மணியனின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி மணியன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என்று நீதிபதியிடம் கோரினார்.
காவல்துறை சார்பில் எஸ்.சி., எஸ்.டி வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மணியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது. அரசியல் சாசனம் என்றாலே அம்பேத்கர் தான் நினைவுக்கு வரும் நிலையில் அவரை மணியன் இழிவுபடுத்தியுள்ளார். மணியன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2021ம் ஆண்டுக்கானது. மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதனையடுத்து, ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது வரும் 25ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அல்லி தெரிவித்தார்.
The post அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேச்சு விஹெச்பி முன்னாள் தலைவர் மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு: ஜாமீன் மனு மீது வரும் 25ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.