×

சந்திரயான் வெற்றிக்கு அறிவியலுக்கு ஒவ்வாத சாயம் பூச வேண்டாம்..திமுக எம்.பி.ஆ.ராசா விமர்சனம்

சென்னை : ஒருபுறம் நிலவுக்கு விண்கலம் அனுப்பியதில் மகிழ்ச்சி அடையும் பிரதமர் மோடி, மறுபுறம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை நிறைவேற்றியதற்காக பெருமைப்படுகிறார் என்று திமுக எம்.பி. ஆ ராசா விமர்சித்துள்ளார். மக்களவையில் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி குறித்த விவாதத்தில் பேசிய அவர், சந்திரயான் விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் இதிகாச மாயை அகற்றப்பட்டுவிட்டதாகவும் இது தான் திராவிடத்தின் வெற்றி என்றும் பெருமை தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம் இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறி இருப்பதில் இந்தியனாக தனக்கும் பெருமை என்றார்.

அதே நேரத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியதற்கு பெருமைப்பட்டு விட்டு, உங்கள் மனமும் மூளையும் தரம் தாழ்ந்து செல்வது வேதனை அளிப்பதாக ஒன்றிய அரசை விமர்சனம் செய்தார்.அப்போது குறுக்கிட்ட பாஜக எம்பி நிஷிகாந்த், சனாதன தர்மத்தை தங்களுக்கு ராசாவின் பேச்சு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இதனால் சபையில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சந்திராயன் வெற்றி என்பது அறிவியலின் வெற்றிதானே தவிர, ஒன்றிய அரசை இதற்கு அறிவியலுக்கு ஒவ்வாத சாயம் பூசக்கூடாது என்றும் ராசா வலியுறுத்தினார். சந்திரயான் 3 திட்டத்திற்கு விக்ரம் சாராபாய் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். முன்னதாக சமஸ்கிருதத்தில் விஞ்ஞான கருத்துகள் இருப்பதாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்ததற்கு பதிலடி கொடுத்த ராசா, 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் கூறப்பட்டு இருப்பதாக தமிழ் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

The post சந்திரயான் வெற்றிக்கு அறிவியலுக்கு ஒவ்வாத சாயம் பூச வேண்டாம்..திமுக எம்.பி.ஆ.ராசா விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Chandrayan ,Chennai ,PM Modi ,Moon ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...