×

காளையார்கோவிலில் சேதமடைந்துள்ள சாலைகளால் அவதி: சீரமைக்க கோரிக்கை

 

காளையார்கோவில், செப். 22: காளையார்கோவில் ஊராட்சியில் அனைத்து ரோடுகளும் பலத்த சேதமடைந்த நிலையில் இருப்பதால் சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இச்சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில் எதிர்புரம் சன்னதி தெரு செல்லும் சிமின்ட் ரோடு பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அந்த ரோட்டினை கிராம நிர்வாக அலுவலகம், சமுதாயக் கூடம் செல்வோர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர். இச்சாலை தற்போது பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இச்சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் முழுவதும் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சிறு மழை பெய்தாலும் இச்சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அவலநிலை தொடர்கிறது. இதேபோல் சோமசுந்தரநகருக்கு செல்லும் சாலையும் தற்போது பலத்த சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இச்சாலையில் தற்போது ஜல்லிகள் மட்டுமே தெரிகின்றன. இந்தச் சாலையை மூர்த்திநகர் மற்றும் சோமசுந்தரநகரிலிருந்து 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 10 மீட்டருக்கு ஒரு இடத்தில் சாலை மிகக்கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

தற்போது பெய்த சிறு மழைக்கே ரோட்டை பயன்படுத்த முடியாத நிலைக்கு உருமாறியுள்ளது. இச்சாலைகளின் நிலை காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. மேலும் நடந்து செல்பவர்களின் பாதங்களையும் இங்குள்ள ஜல்லி கற்கள் பதம் பார்த்து விடுகின்றன. அவசரக் காலங்களில் பயன்படுத்தவே முடியாத நிலையில் இச்சாலைகள் உருமாறியதாக உள்ளன. இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளிலும் சாலைகள் சேதமடைந்து மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இச்சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காளையார்கோவிலில் சேதமடைந்துள்ள சாலைகளால் அவதி: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Kalaiyarkoil Panchayat ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...