புதுடெல்லி: மக்கள் தொகை அடிப்படையில் 2026ம் ஆண்டுக்கு பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தரபிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களவை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 மக்களவை தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 மக்களவை தொகுதிகள் வரை குறைந்து 31 மக்களவை தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம். இதேபோல் கேரளாவிலும் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 20லிருந்து 12ஆக குறையலாம். கர்நாடகாவில் மக்களவை தொகுதிகள் 28லிருந்து 26ஆக குறையலாம். தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதுதான்.
அப்போதுதான், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும். தொகுதி மறுவரையால் உத்தரபிரதேசத்துக்கு 11, பீகாருக்கு 10, ராஜஸ்தானுக்கு 6, மத்தியபிரதேசத்துக்கு 4, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உபியில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தொகுதி மறுவரையறை செய்தால் 8 எம்பி தொகுதியை தமிழ்நாடு இழக்கும்: ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

