
வல்லம், செப். 20: வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் 12வது வார்டில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் ஏற்பாட்டில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி தலைமையில் மருத்துவ குழுவினர் இந்த காய்ச்சல் முகாமை நடத்தினர். இதில் காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
காய்ச்சல், கை, கால், மூட்டு வலி போன்றவை இருந்தால் உடனே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். வீடுகளை சுற்றி, தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. வல்லம் பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன், 12வது வார்டு உறுப்பினர் அன்பழகன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வல்லத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.