×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.1,500, ஐஸ் மல்லி ரூ.1,200

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் மற்றும் வாழை இலையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகம் உட்பட வடமாநிலங்களில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை ஒரு கிலோ மல்லி ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.1,500, ஐஸ் மல்லி ரூ.700ல் இருந்து ரூ.1,200, கனகாம்பரம் ரூ.600 லிருந்து ரூ.800, ஜாதிமல்லி, முல்லை ரூ.600ல் இருந்து ரூ.1,000, சம்பங்கி ரூ.300 லிருந்து ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. சாமந்தி ரூ.60 லிருந்து 100, பன்னீர் ரோஸ் ரூ.100 லிருந்து 130, சாக்லேட்ரோஸ் ரூ.160 லிருந்து ரூ.210, அரளி பூ ரூ.150 லிருந்து ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரம் களைகட்டி உள்ளது. பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை 3 மடங்கு அளவுக்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,’’ என்றார். ஒரு கட்டு வாழையிலை ரூ.1,600: வாழை இலை மார்க்கெட்டில் ஒரு கட்டு பெரிய வாழை இலை ரூ.1,600, ஒரு கட்டு சிறிய வாழை இலை ரூ.800க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு தலைவாழை இலை ரூ.10க்கும் விற்பனை ஆனது. இதுகுறித்து, வாழை இலை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாழையிலை விலை அதிகரித்து காணப்பட்டாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்,’’ என்றார்.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.1,500, ஐஸ் மல்லி ரூ.1,200 appeared first on Dinakaran.

Tags : Coimpet ,Vinayagar Chadurthi ,Chennai ,Vinayagar ,Coimbed ,northernmost ,Tamil Nadu ,
× RELATED பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள்...