×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி மனு: உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார். கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளார். அவர் 2017ல் பேட்டியளித்தபோது, என்னுடைய தம்பி கனகராஜ், எங்க வீட்டிலிருந்து எங்க சித்தி வீட்டிற்கு வந்தாரு. குழந்தை பிறந்திருக்குனு பார்க்க வந்தாரு. காரை அங்க விட்டிட்டு பைக்ல வந்தாரு. ரோடு கிராஸ் பண்ணிறப்போ ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. தம்பிமேல வீண்பழி சுமத்ராங்க என்று கூறியுள்ளார்.

ஆனால், கடந்த 5ம் தேதி பேட்டியில் அப்படியே முன்னுக்கு பின் முரணாக பொய்யான தகவல்களை கூறியுள்ளார். எனவே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக வேண்டும். அவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி மஞ்சுளா முன்பு 19ம் தேதி (செவ்வாய்) விசாரணைக்கு வர உள்ளது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி மனு: உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Kanagaraj ,Thanapal ,Kodanadu ,Chennai ,Edapadi ,Tanapal ,Court ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்