×

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியோடு இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ‘‘தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் குரல் எழுப்புவோம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால பாராளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொது செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி மற்றும் திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், முக்கிய மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். அண்ணாவின் பிறந்த நாளில்- தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கி வைத்து-1கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய-தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நன்றியை – பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல்-இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்றுவரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

பாஜ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும்-ஒன்றிய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜ ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளிக்க தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி-“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” அண்ணா பிறந்த நாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது ஒன்றிய பாஜ அரசு. கலைஞரும், இன்று அவர் வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்துக்கு கூட பாஜ அரசு தயாராக இல்லை. எனவே, இந்த சிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.

இந்தியாவிற்கே முன்னோடியாக சமூகநீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், ‘மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்’, ‘அரசுதுறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’, ‘தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்’, ‘பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்’, ‘உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளோடு ‘இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்’ மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

ஒன்றிய அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘விஸ்வகர்மா யோஜானா’ திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்லவிடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள். எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பாஜ அரசு, தற்போது ‘இந்தியா’ கூட்டணிக்கு அஞ்சி ‘பாரத்’ என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்-முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பாஜ அரசை, நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியோடு இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Tamil Nadu ,India' alliance ,Chief Minister ,MCM ,G.K. Stalin ,MPs ,Stalin ,Chennai ,'India' alliance ,B.C. G.K. ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில்...