×

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை 45 நாள் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு: 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நேற்று பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 39 வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறையில் ஜன்னல்கள், கதவு உள்ளிட்ட அனைத்தும் மரப்பலகையால் அடைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 24 மணி நேரமும் துணை ராணுவ படையினர், தமிழக காவல் துறையினர் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் அங்கு தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

சென்னையில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என 3 தொகுதிகள் உள்ளது. இங்கு நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரிக்கும், மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென்சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. முகவர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து 45 நாட்கள் துணை ராணுவம், போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே இந்த பகுதிக்கு செல்ல முடியும். அனைத்து நடவடிக்கைகளும் வெப்கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் தினசரி மையங்களுக்கு சென்று பார்வையிட்டு, கையெழுத்து போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதுதான் இந்த அறையில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வெளியே எடுத்து வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை 45 நாள் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு: 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Parliament ,Dinakaran ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...