
சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. திருவான்மியூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். பெருங்குடியை சேர்ந்தவர் 35 வயது மதிக்கதக்க பெண். இவர்கள் கூலி தொழிலாளிகள். திருவான்மியூரில் ஒன்றாக வேலை செய்தபோது, இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இப்பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, அப்பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரபாகரன் அவருடன் உல்லாசமாக இருந்தார். இந்நிலையில், அந்த பெண்ணின் 6 வயது மகளுக்கு பிரபாகரன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், பயந்துபோன அச்சிறுமி, தனது தாயிடம் நடந்ததை கூறினாள்.
இதுகுறித்து, சிறுமியின் தாயார் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் பிரபாகரனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தழிழரசி குற்றவாளி பிரபாகரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் , ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.