×

தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது

திருக்கோவிலூர், செப். 14: திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளிப்பாடி கிராமத்தில் வசிக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளி அப்புசாமி மகன் மணிவாசகம் (45). இவர் கடந்த 4ம் தேதி கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்றுள்ளார். அவரது மனைவி கூலி வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவின் உடைத்து உள்ளே வந்து பீரோவில் இருந்த 26.5 சவரன் தங்க நகை, 232 கிராம் வெள்ளி கொலுசு, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்த மணிவாசகம் பின்பக்க கதவு திறந்து பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நகை, பணம் திருடுபோனது குறித்து மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின்பேரில், திருக்கோவிலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் சிவஜோதி, பாஸ்கரன், வீரப்பன், மணிமாறன், சத்யா ஆகியோர் கொண்ட தனிப்படை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டது. அப்போது கள்ளிப்பாடி கிராமத்தில் நடந்ததுபோல் தர்மபுரி மாவட்டத்திலும் அரங்கேறி இருப்பது தெரிந்தது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அரூர் தனிப்படை போலீசார் உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அரூர் கொள்ளை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகையும், கள்ளிப்பாடியில் கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற கைரேகையும் ஒன்றாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து அரூர் கொள்ளை சம்பவம் நடைபெறும்போது கிடைக்கப்பட்ட செல்போன் எண்களை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அரூர் தனிப்படை போலீசாரிடம் குற்றவாளி சிக்கினார். அவனை அரூர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசார் சிறையில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தினகரன் (38) என்பவரை நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது கள்ளிப்பாடி கிராமத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டான். மேலும் கொள்ளை அடித்த 26.5 சவரன் நகைகள், 232 கிராம் வெள்ளி கொலுசுகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை இரும்பேடு கிராமத்தில் உள்ள வீட்டின் மாடியில் மண் பானையில் வைத்து இருபதாக கூறியுள்ளான். இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் போலீசார் மீட்டனர். 2 மாவட்டத்தில் தொடர்ந்து பகலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல பகல் கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் பாராட்டினார்.

The post தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Kallipadi ,Manalurpet ,
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்