×

54 வயது தொழிலாளியை மணந்த 26 வயது ஆசிரியை:பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

தாரமங்கலம்: சேலம் அருகே 54 வயது தொழிலாளியை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த 26 வயது ஆசிரியை, பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54), விசைத்தறி தொழிலாளி. இவருக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, கிருஷ்ணன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் மகளான முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த விமலா (26) மீது, கிருஷ்ணனின் காதல் பார்வை விழுந்தது. விமலாவுக்கும் கிருஷ்ணனை பிடித்துப் போகவே, தாய்க்கு ெதரியாமல் மகளிடமும், கிருஷ்ணன் காதல் லீலையை அரங்கேற்றி வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய விமலா, திருவண்ணாமலை கோயிலில் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள், தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்று விட்டதாக தாரமங்கலம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், இருவரையும் தாரமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த காதலர்கள், பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணின் உறவினர்கள், ‘பட்டம் படித்த பெண்ணான நீ, தந்தை வயதுள்ளவரை திருமணம் செய்யலாமா?’ என்று கேட்டு, அறிவுரைகளை கூறினர்.

மேலும், கிருஷ்ணனை உதறி விட்டு வரும்படியும், நன்கு படித்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கிறோம், என்றும் கூறி விமலாவின் காலில் விழுந்து கதறினர். ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்காத விமலா, காதல் கணவர் கிருஷ்ணனுடன் தான் செல்வேன் என விடாப்பிடியாக கூறிவிட்டார். இதையடுத்து, இருவரும் மேஜர் என்பதாலும், விமலா கணவருடன் தான் செல்வேன் என உறுதியாக கூறியதாலும், அவரது விருப்பப்படியே, கிருஷ்ணனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் சென்றனர்.

The post 54 வயது தொழிலாளியை மணந்த 26 வயது ஆசிரியை:பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Dharamangalam ,Salem ,
× RELATED ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி