உடுமலை, செப்.13: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையானது மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, கடந்த பத்து நாட்களில் அணை நீர்மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வரும் பாரம் அணியிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்காக ஒரு சுற்று தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
ஒரு சுற்று தண்ணீர் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யாது என பிஏபி பாசன சங்க நிர்வாகிகள் ஆங்காங்கே காத்திருப்பு கூட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத அளவிற்கு கால்வாயில் செடி ,கொடி, புதர்கள் மற்றும் மரங்கள் விழுந்து கிடந்தன. இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியது.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் கால்வாயில் இரு கரைகளையும் சுத்தப்படுத்தி கால்வாய் க்குள் கடந்த மரங்களையும் செடி, கொடி, புதர்களையும் அகற்றி சீரமைத்துள்ளனர். கால்வாய் சீரமைக்கப்பட்டதால் பொதுப்பணி துறையினர் அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post உடுமலை கால்வாய் சீரமைப்பு: தண்ணீர் திறந்து விடும் முன்பே நடவடிக்கை appeared first on Dinakaran.