ஓமலூர்: ஓமலூர் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்திய, வட மாநில வாலிபரை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சுகந்தம் நகரை சேர்ந்தவர் பாலமூர்த்தி (30). இவரது மனைவி ராதா (25). 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் முத்துநாயக்கன்பட்டி செல்லும் சாலையில், கூடாரம் அமைத்து கயிற்று கட்டில் செய்து விற்பனை செய்து வந்தார்.
நேற்று அந்த வழியாக வந்த வடமாநில வாலிபர் ஒருவர், அங்கு விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தை வர்ணிகாஸ்ரீயை, தூக்கி கொண்டு ஓடியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலமூர்த்தி சத்தம்போட்டபடி விரட்டி சென்றார். அங்கிருந்தவர்களும் ஓடி வருவதை பார்த்த வாலிபர், குழந்தையை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். ஆனால், பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து, கைகளை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர், ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தி தெரிந்த நபர்கள் விசாரித்தபோது, தான் ஒடிசா மற்றும் பீகாரில் இருந்து வந்ததாக மாற்றி மாற்றி கூறினார். இதையடுத்து பிடிபட்ட வாலிபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிடிபட்ட வாலிபர் யார்?, அவர் எங்கு வேலை செய்கிறார்? இவரை அழைத்து வந்த ஏஜென்ட் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post 3 வயது குழந்தையை கடத்திய வாலிபரை கட்டி வைத்து அடி appeared first on Dinakaran.
