×

சென்னை கொலை கும்பல் வீசிச்சென்ற 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

*நகரி அருகே பரபரப்பு

திருமலை : நகரி அருகே கொலை கும்பல் வீசிச்சென்ற 4 நாட்டு வெடிகுண்டுகளை சென்னை நிபுணர்கள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். தமிழ்நாடு சென்னை நசரத்பேட்டை அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி எபினேசர்(25). இவர் மீது நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட குற்ற வழக்குகள் இருந்தது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி எபினேசர் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் சென்னை நோக்கி பேரம்பாக்கம் தண்டலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் வந்தபோது எதிர் திசையில் வந்த கார் இவரது ஆட்டோ மீது மோதியது. இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை இவர் வீசியது. உடனே சுதாரித்து கொண்ட எபினேசர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடியபோது, மர்ம கும்பல் விரட்டி சென்று கத்தி, வீச்சறிவாள் உட்பட பயங்கர ஆயுதங்கள் மூலம் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. தொடர்ந்து, இந்த கொலை கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ரவுடி எபினேசரை கொலை செய்த பிறகு அங்கிருந்து தப்பிச்சென்ற கொலை கும்பல் ஆந்திர மாநிலம், நகரி அருகே தங்களிடம் மீதமிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் விவசாய நிலத்தில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக போலீசார் நகரி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நகரி போலீசார் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்த விவசாய நிலத்தில் யாரையும் செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று விவசாய நிலத்தில் வீசப்பட்டு கிடந்த 4 வெடிகுண்டுகளை பாதுகாப்பாக பறிமுதல் செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர். வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை கொலை கும்பல் வீசிச்சென்ற 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Nagari ,Chennai ,
× RELATED சொந்தக் கட்சியினரே கடும் எதிர்ப்பு;...