×

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: மக்கள் கோரிக்கை

 

வருசநாடு, செப்.11: க.மயிலாடும்பாறையில் ஊராட்சி ஒன்றிய புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.மயிலாடும்பாறை கிராமத்தில் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அதனால் அலுவலக கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் கட்டிடத்தின் சில அறைகளுக்குள் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்படுகிறது.

அதனால் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவதால் அதிகாரிகள் அச்சத்துடன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல அலுவலக கட்டிடத்தில் குறைந்த அறைகள் மட்டுமே உள்ளது. இதனால் பணியாளர்கள் இட நெருக்கடிக்கு மத்தியில் அமர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒன்றிய அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat Union Office ,Varusanadu ,Panchayat ,Union ,Mayiladumparai ,
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...