×

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் R1.97 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி தீவிரம்

* 1,150 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் அமைகிறது

* மாணவர்கள் அறிவு திறனை வளர்த்துக்கொள்ள உதவும்

திருவாரூர் : திருவாரூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் நகராட்சி பகுதியில் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நகராட்சி சோமசுந்தரம் பூங்காவானது தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிக்காக 4 புறமும் நடைமேடைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், நகரில் நீராதாரத்தை மேம்படுத்தும் வகையில், பிடாரி கோயில் தெருவில் இருந்து வரும் குளமானது ரூ. 1 கோடியே 9 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த குளமானது தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடைபாதைகள், குழந்தைகள், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள், மின்விளக்கு வசதி ஆகியவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேபோல், வாசன் நகர் குளம், ரூ. 73 லட்சம் மதிப்பிலும், ஐநூற்று பிள்ளையார் கோயில் குளமானது, ரூ. 1 கோடியே 23 லட்சம் மதிப்பிலும் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடை பாதைகள், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், மின்விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மொத்தம் 3 குளங்களிலும் ரூ. 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாணவர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்துகொள்ளும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தெற்கு வீதியில் ரூ. 1 கோடியே 97 லட்சம் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த அறிவுசார் மையமானது 1,150 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்படுகிறது.

இதில் ஆண், பெண் இருபாலருக்கும் தனிதனியாக புத்தக வாசிப்பு அறைகள், பள்ளி, குழந்தைகளுக்கான வாசிப்பு அறைகள், கணினி அறை, கூட்டரங்கு, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் நலன் கருதி, கல்வி துறையில் பல்வேறு உன்னத திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி இல்லம் தேடிக் கல்வி திட்டம், நான் முதல்வன், பள்ளி மேலாண்மை குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளை கண்டறிவதற்கான சிறப்பு செயலி மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்க்கு வினாடி- வினா போட்டி, மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணித ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை போன்று தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரையில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும்வகையில் காலை சிற்றுண்டி திட்டமும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டப்பட்டு வரும் இந்த அறிவுசார் மையம் மூலம் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க உதவும் என்பதால் இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் R1.97 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Kadi ,Intellectual ,Dinakaran ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்