×

பைக்கில் சென்றவர்களை துரத்தியபோது ஜீப் மீது லாரி மோதி இன்ஸ்பெக்டர், டிரைவர் படுகாயம்


சூலூர்: சூலூரில் இன்று அதிகாலை வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றவர்களை துரத்திப்பிடிக்க முயன்றபோது ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் சூலூர் இன்ஸ்பெக்டர், டிரைவர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாதையன். இவர், இன்று அதிகாலை 3.30 மணியளவில் தென்னம்பாளையம் பிரிவு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் ஜீப் டிரைவர் சிவக்குமாரும் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்துமாறு இன்ஸ்பெக்டர் மாதையன் சைகை காட்டினார்.

ஆனால் பைக் அவர் மீது மோதுவதுபோல் வந்துவிட்டு நிற்காமல் சென்றது. பைக்கில் 2 பேர் இருந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன், ஜீப்பில் பைக்கை துரத்திச் சென்றார். டிரைவர் சிவக்குமார் ஜீப்பை ஓட்டினார். அப்போது அந்த வழியாக நடந்துசென்ற ஒருவர் மீது பைக் மோதியது. இதில் நிலைதடுமாறி பைக்கில் சென்றவர்கள் கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த வாலிபர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் சிவக்குமார் ஜீப்பை திருப்பினார். அப்போது அடையாளம் தெரியாத லாரி மீது மோதிய ஜீப், பின்னர் அருகில் இருந்த பேரிகார்டில் மோதி நின்றது.

லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த நேரத்தில் பைக்கில் இருந்து தவறிவிழுந்த 2 வாலிபர்களும் எழுந்து தப்பியோடி விட்டனர். விபத்தில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் மாதையன், டிரைவர் சிவக்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் சிக்கிய பைக் நொறுங்கியது. தகவலறிந்து சம்பவயிடம் வந்த போலீசார் பைக்கில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு விரைவில் தமிழகஅரசின் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர், இதேபோல் திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்விற்காக தமிழக முதல்வரின் சிறப்பு விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பைக்கில் சென்றவர்களை துரத்தியபோது ஜீப் மீது லாரி மோதி இன்ஸ்பெக்டர், டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Zulur ,Lorry ,Jeep ,Soulur ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது