×

இரணியல் அருகே பேஸ்புக் காதலிக்கு சரமாரி கத்திக்குத்து வாலிபர் கைது

திங்கள்சந்தை, செப்.9: குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேரந்தவர் பிரவீன் ரஞ்சித் (27). கொத்தனார். இவருக்கும், இரணியல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் இன்ஜினியரிங் முடித்து விட்டு கட்டிட நிறுவனம் ஒன்றில் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். பிரவீன் ரஞ்சித், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது முகநூல் (பேஸ்புக்) மூலம் இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த பிரவீன் ரஞ்சித் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது குடிக்க தொடங்கி உள்ளார். அவரின் நடவடிக்கைகள் இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. இதனால் பிரவீன் ரஞ்சித்திடம் பேசுவதை தவிர்த்தார். மேலும் செல்போனில் அவரது நம்பரையும் பிளாக் லிஸ்டில் வைத்தார். இதனால் இளம்பெண் மீது பிரவீன் ரஞ்சித் ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வேலை முடிந்து இளம்பெண் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்து பிரவீன் ரஞ்சித் தகராறு செய்தார். ஆபாசமாக பேசிய அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்தினார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது இளம்பெண்ணை மிரட்டி விட்டு, பிரவீன் ரஞ்சித் தப்பி ஓடினார். படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி பிரவீன் ரஞ்சித் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 323, 324, 506 (ii) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரவீன் ரஞ்சித்தை கைது செய்தனர்.

The post இரணியல் அருகே பேஸ்புக் காதலிக்கு சரமாரி கத்திக்குத்து வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Facebook ,Iranial ,Praveen Ranjith ,Kuruntankode ,Kumari district ,Mason ,Dinakaran ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி