×

திருச்சி-மானாமதுரை ரயிலை காரைக்குடியுடன் நிறுத்த மக்கள் கடும் எதிர்ப்பு

மானாமதுரை, செப்.8: திருச்சி-மானாமதுரை இடையே இயக்கப்படும் டெமு ரயில் காரைக்குடியுடன் நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மானாமதுரை வட்டார பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி-மானாமதுரை-திருச்சி இயக்கப்படும் (வண்டி எண் 06829/30) திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு முயற்சியால் 2011ம் ஆண்டு மன்னார்குடியில் இருந்து மானாமதுரைக்கு 6 பெட்டிகளுடன் டெமோ ரயிலாக இயக்கப்பட்டது.

இந்த ரயில் ஆறு மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. கொரோனா காலத்தில் ஒன்றிய பாஜக அரசு மன்னார்குடியில் இருந்து இயங்கிய ரயிலை திருச்சியில் இருந்து இயக்க உத்தரவிட்டது. இதனால் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் தஞ்சாவூர் திருவாரூர் கும்பகோணம் மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் திருச்சி-மானாமதுரை வரை இயங்கிய ரயிலை ரயில்வே நிர்வாகம் காரைக்குடியுடன் நிறுத்த முடிவு செய்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் திருச்சியில் இருந்து மானாமதுரை வரவேண்டிய டெமோ ரயில் காரைக்குடியுடன் நிறுத்தப்படும். ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சமூக ஆர்வலர்கள் நாகநாதன், பாஸ்கரன், பாலமுருகன் ஆகியோர் கூறுகையில், மதிய நேரத்தில் மதுரை அல்லது ராமேஸ்வரம் செல்லவோ, காரைக்குடி,திருச்சி,தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு மானாமதுரை சிவகங்கையிலிருந்து செல்ல முக்கிய வண்டியாக டெமு ரயில் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த வண்டியை காரைக்குடியுடன் நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளனர். இதனால் மதிய நேரத்தில் மிகவும் அனைவரும் பயனடைந்து வந்த நிலையில் சிவகங்கை, மானாமதுரை பொதுமக்கள் இந்த வண்டியை பறிகொடுக்கும் நிலையில் உள்ளோம்.

சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் இதைப் பற்றி ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மீண்டும் மானாமதுரை மன்னார்குடி வரை டெமு ரயில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மதிய நேரத்தில் இருக்கும் ஒரே ஒரு தினசரி பயணிகள் வண்டியை மானாமதுரை, சிவகங்கை பொதுமக்கள் இந்த வண்டியை இழக்க நேரிடும் என்றனர்.

திருச்சியில் இருந்து காலை 10.15 புறப்பட்டு மானாமதுரைக்கு மதியம் 1.15 மணிக்கு வந்து சேரும்.
மறுபடியும் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் பயணிகள் ரயில் இணைப்பு ரயிலாக இருப்பதால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி பயணிகள் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்ல இந்த ரயில் பயனுள்ளதாக இருந்தது.

The post திருச்சி-மானாமதுரை ரயிலை காரைக்குடியுடன் நிறுத்த மக்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Karaikudi ,TEMU ,Trichy-Manamadurai ,Dinakaran ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது