×

மகளின் திருமணம் நடந்த நட்சத்திர ஓட்டலில் சென்னை தொழிலதிபர் கேரளாவில் மனைவியுடன் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சுகதன் (71). இவரது மனைவி சுனிலா (70). இந்த தம்பதிக்கு உத்தரா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. சுகதன் 30 வருடங்களுக்கும் மேலாக மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். பின்னர் ஊர் திரும்பிய அவர், சென்னையில் வாகன உதிரிபாக கடை நடத்தினார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அவருக்கு சமீபத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அவரது மகள் உத்தராவுக்கு திருமணம் நடந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து மிகவும் தடபுடலாக திருமணத்தை சுகதன் நடத்தினார். இதனால் கூடுதலாக கடன் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி மகளின் திருமணம் நடந்த அதே நட்சத்திர ஓட்டலில் சுகதனும், மனைவி சுனிலாவும் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் மதியம் வரை கணவன்- மனைவி 2 பேரும் அதே ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளனர். மாலையில் அறையை துப்புரவு செய்வதற்காக ஊழியர் சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாக தட்டி பார்த்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது சுகதனும், சுனிலாவும் ஒரே துப்பட்டாவில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர். போலீசார் 2 பேரின் உடல்களையும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post மகளின் திருமணம் நடந்த நட்சத்திர ஓட்டலில் சென்னை தொழிலதிபர் கேரளாவில் மனைவியுடன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kerala ,star cafe ,Thiruvananthapuram ,Sugatan ,Haripadam, Alapuzha District, Kerala ,sunila ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...