×

டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உட்பட 3 பேர் பலி


ராமநாதபுரம்: ஆடல், பாடல் நிகழ்ச்சி காணச் சென்றபோது, டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சோனைமுத்து மகன் இசேந்திரன் (17), பிளஸ் 2 மாணவர். முனியசாமி மகன் அன்பரசு (20), சண்முகவேல் மகன் லிங்கேஸ்வரன் (22). இவர்கள் மூவரும் நேற்றிரவு 9 மணியளவில் மேலச்செல்வனூர் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஊரிலிருந்து டூவீலரில் சென்றனர். சாயல்குடி-ராமநாதபுரம் இசிஆர் சாலையில் டூவீலர் சென்றபோது, ராமநாதபுரம் புத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (45), அவரது மனைவி சண்முகவள்ளி, மகன் ஹரிபாலா (14) ஆகியோர் வந்த ஆம்னி கார், சாத்தங்குடி விலக்கு ரோட்டில் டூவீலருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட இசேந்திரன், அன்பரசு ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயமடைந்த லிங்கேஸ்வரன் ஆம்புலன்ஸில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆம்னி காரில் வந்த மூவரும் காயமடைந்து, சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், பாலமுருகன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த இளைஞர்கள் ஓட்டிச் சென்ற டூவீலர் சில தினங்களுக்கு முன்பு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு டூவீலரில் விதிமுறைகளை மீறி மூவர் சென்றுள்ளனர். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. அசுர வேகத்தில் சென்றதால் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மோதிய வேகத்தில் டூவீலர் உடைந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

The post டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Adal ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...