×

பாஜவுக்கு பொய் சொல்வதும், கலவரத்தை தூண்டுவதும்தான் வேலை சனாதனத்துக்கு எதிரான எனது குரல் தொடரும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தென்காசி: பாஜவுக்கு பொய் சொல்வதும், கலவரத்தை தூண்டுவதும்தான் வேலை. சனாதனத்துக்கு எதிரான எனது குரல் தொடரும் என்றுஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தென்காசியில் திமுக இளைஞர் அணி 2 வது மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: வருகிற 15ம் தேதி மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை பொறுக்காத ஒன்றிய பாஜ அரசு வயிற்று எரிச்சல் காரணமாக பொய் செய்தி பரப்புகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் அது பற்றி தான் பேசுகிறது. சனாதனம் என்பது மாற்ற முடியாதது, நிலையானது‌, கேள்வி கேட்கக்கூடாதது என்று அவர்கள் கூறுகின்றனர். இதனை எல்லாம் மாற்றிக் காட்டுவோம், கேள்வி கேட்போம் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கரும் பெரியாரும் திமுகவும் குரல் கொடுத்ததை தான் நானும் சொன்னேன்.

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினால் இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறேன் என்று இட்டுக்கட்டி பொய் கூறுகின்றனர். பாஜகவினர் வாயைத் திறந்தாலே பொய். நான் இனப்படுகொலை செய்யச் சொல்லிவிட்டேனாம். பிரதமர் மோடி வறுமையை ஒழிப்பேன் என புரூடா விட்டாரே. வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் இருக்கும் பணக்காரர்களை எல்லாம் அழைத்து கொலை செய்வதா? இந்த அறிவு கூட இல்லாத பாஜக எனது பேச்சைத் திரித்துப் பரப்பியது. அமித்ஷா, நட்டா என இப்போது அதைப் பற்றி பேசாத ஆள் கிடையாது. இதற்கு மேல் நான் பேசப்போவது இல்லை, தமிழ்நாட்டு மக்கள் பேச வேண்டும். சனாதனத்துக்கு எதிராக எனது குரல் தொடரும். பாஜவிடம் ஒன்பது வருட சாதனைகளை எடுத்துக் கூற எதுவும் இல்லை. பொய் சொல்லுவதும், கலவரத்தை தூண்டுவதும் தான் அவர்களது வேலை.இவ்வாறு அவர் பேசினர்.

சாமியாருக்கு ₹500 கோடி சொத்து
தென்காசியில் திமுக மூத்த முன்னோடிகள் 1,520 பேருக்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி மற்றும் நினைவு பரிசுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘எனது தலையை சீவி வந்தால் பத்து கோடி ரூபாய் தருவதாக ஒரு சாமியார் அறிவித்துள்ளார். அவ்வளவு எல்லாம் வேண்டாம் பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே தலையை சீவி கொள்வேன். அந்த சாமியாருக்கு எப்படி பத்து கோடி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன். அதனை அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சாமியார் தனது சொத்து மதிப்பு 500 கோடி என்று கூறி இருக்கிறார். உண்மையான சாமியாராக இருந்தால் இவ்வளவு சொத்து இருக்குமா? போலி சாமியார்களிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.

பிரதமர் மோடி வறுமையை ஒழிப்பேன் என புரூடா விட்டாரே. வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் இருக்கும் பணக்காரர்களை எல்லாம் அழைத்து கொலை செய்வதா?

The post பாஜவுக்கு பொய் சொல்வதும், கலவரத்தை தூண்டுவதும்தான் வேலை சனாதனத்துக்கு எதிரான எனது குரல் தொடரும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Labor ,Sanathana ,Minister ,Udayanidhi Stalin ,Tenkasi ,Bajau ,Udhayanidhi Stalin ,Sanatana ,Dinakaran ,
× RELATED அனைத்து நிறுவனங்களும்...