×

ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி பராமரிக்காமல் கைவிட்ட மகன் மீது கண்ணீர் மல்க மூதாட்டி புகார்; நடவடிக்கை எடுப்பதாக

திருவள்ளூர்: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றிவிட்டு தன்னை பராமரிக்காமல் கைவிட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார். திருவள்ளூர் ம.பொ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி முனியம்மாள்(65). இவர்களுக்கு மகேஷ்பாபு என்ற மகனும் லோகேஸ்வரி, தேவிகா, விஜயலட்சுமி என மூன்று மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் 4 பேருக்கும் திருமணம் ஆகி திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

முனியம்மாளின் கணவர் கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் மூதாட்டி முனியம்மாளுக்கு இடுப்பு பகுதி செயலிழந்து நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக பெரிதும் சிரமப்பட்டு வருகிறார். இதையடுத்து முனியம்மாளின் மகன் மகேஷ்பாபு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி தனது பெயருக்கு பத்திரம் செய்து கொண்டு மகள்கள் லோகேஸ்வரி, தேவிகா, விஜயலட்சுமி ஆகியோருக்கும் எந்த பங்கும் தராமலும் ஏமாற்றி உள்ளார்.

மேலும் தற்போது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படும் தாயையும் பார்க்காமல், உணவளிக்காமல் இருப்பதோடு மூன்று மகள்களையும் நடுத்தெருவில் கையேந்தும் அளவிற்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மகன் மீது கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி முனியம்மாள் புகார் அளித்ததின் பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொண்டார். அப்போது மூதாட்டி முனியம்மாள் தனது மகன் தன்னை ஏமாற்றி மாற்றிய சொத்து பத்திரங்களை ரத்து செய்து முழு அதிகாரம் தனக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியர், ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. மேல் நடவடிக்கைக்காக கலெக்டரை அணுகவும் என பதில் அளித்திருந்தார்.இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூதாட்டி முனியம்மாள் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்திப்பதற்காக குறைதீர்க்கும் கூட்டம் அரங்கின் எதிரே சுவற்றில் சாய்ந்த படி படுத்து இருந்துள்ளார்.

இதனை அதிகாரிகள் பார்த்து கலெக்டருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக வெளியே வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 11ம் தேதி விசாரணைக்கு வரச் சொல்லி மகனுக்கு உத்தரவிட்டார். மேலும் மூதாட்டியின் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கண்ணீர் மல்க மூன்று மகள்களும் கலெக்டரிடம் தெரிவிக்கும்போது கண்கள் கலங்கி தண்ணீரை துடைத்த சம்பவம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மனு அளிக்க வந்தவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

The post ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி பராமரிக்காமல் கைவிட்ட மகன் மீது கண்ணீர் மல்க மூதாட்டி புகார்; நடவடிக்கை எடுப்பதாக appeared first on Dinakaran.

Tags : Malka Mathathi ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...