×

முன்னாள் ஒன்றிய அமைச்சரின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு: பீகாரில் அதிர்ச்சி

நாளந்தா: முன்னாள் ஒன்றிய அமைச்சரின் உறவினர் பிந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் நாளந்தா அடுத்த தர்ஹாரா பகுதியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் (ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர்) ஆர்சிபி சிங்கின் உறவினர் பிந்து என்பவர் வசித்து வருகிறார். இவரை சந்திப்பதற்காக நான்கு பேர் அவரது வீட்டிற்கு வந்தனர். பிந்துவும், 4 பேரும் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென நான்கு பேரில் ஒருவர் பிந்துவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன்பின் அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே, 4 பேரும் தப்பிவிட்டனர்.

உடனடியாக துப்பாக்கி சூடு காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த பிந்துவை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பிந்துவிடம் வாக்குமூலம் பெற்றனர். சம்பவம் நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பிந்து கூறுகையில், ‘என் வீட்டிற்கு வந்த 4 பேரும், எனது உறவினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆர்சிபி சிங்கைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவரை (ஆர்சிபி சிங்) கொன்றுவிடுவோம் என்று கூறினர். அப்ேபாது நான்கு பேரில் ஒருவன் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.

துப்பாக்கி குண்டுகள் என் மீது பாய்ந்தவுடன் நான் கீழே விழுந்துவிட்டேன். அதன்பின் அங்கிருந்து 4 பேரும் தப்பிவிட்டனர்’ என்றார். இதுகுறித்து ஆர்.சி.பி சிங் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எனது பேரன் வகை உறவை சேர்ந்தவர் ஆவார். என்னுடன் எப்போதும் இருப்பார். விடுமுறை என்பதால் சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். அவரைச் சந்தித்த சிலர், அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, காட்டாட்சியை நடத்தி வருகிறது’ என்றார்.

The post முன்னாள் ஒன்றிய அமைச்சரின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு: பீகாரில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Union ,minister ,Bihar ,Nalanda ,Bindu ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...