×

தாம்பரம் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை: பூட்டை உடைக்க முடியாததால் செல்போன்கள் தப்பியது

தாம்பரம்: தாம்பரம் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் ₹25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரு கடையின் பூட்டை உடைக்க முடியாததால் செல்போன்கள் தப்பியது. தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் பால் கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். இவர், நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாபெட்டியில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுபோல் ஜெயபிரகாஷ் கடையின் அருகில் உள்ள செல்போன் கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. மற்ற பூட்டுகளை உடைக்க முடியாததால் கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதனால், செல்போன் கடையில் இருந்த ₹3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் செல்போனுக்கு தேவையான பொருட்கள் தப்பியது. இதுபோல் அதே சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தாண்டி சந்திரசேகரன் என்பவரின் நாட்டு மருத்துக்கடையிலும் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கண்காணிப்பு கேமராவை மறைத்துவைத்துவிட்டு கல்லாபெட்டியில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்தபோது, பெரிய இரும்பு கம்பி மூலம் கடைகளின் பூட்டு உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

The post தாம்பரம் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை: பூட்டை உடைக்க முடியாததால் செல்போன்கள் தப்பியது appeared first on Dinakaran.

Tags : tambaram ,Thambaram ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...