விராலிமலை, செப். 3: எண்ணை ஊராட்சியில் பாழடைந்து பயன்பாடற்று கிடக்கும் சமுதாய கூட கட்டிடத்தை இடித்து விட்டு புதிய சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அன்னவாசல் ஒன்றியம், எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.உடையாம்பட்டியில் கடந்த 1988 ம் ஆண்டு தமிழக அரசின் தாய் திட்டத்தின் கீழ் 3 அறைகளுடன் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் சத்துணவு கூடமாகவும், அங்கன்வாடி மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து காற்று, மழை என பல்வேறு இயற்கை சீற்றங்களை கட்டிடம் தாக்கு பிடிக்க முடியாததால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் உறுதி தன்மையை இழந்து சேதமடையத் தொடங்கியது.
கடந்த 7 ஆண்டுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கட்டிடம் தற்போது முழுவதுமாக பாழடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது, விராலிமலை- இலுப்பூர் சாலையின் அருகே இந்த கட்டிடம் இருப்பதால், புதிய சமுதாயகூட கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தால் விஷேச காலங்களில் விருந்தினர்கள் எளிதாக வந்து செல்ல முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு பாழடைந்த சமுதாய கூட கட்டிடத்தை இடித்து விட்டு புதிய சமுதாய கூடம் அதே இடத்தில் கட்டிதர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post எண்ணை ஊராட்சியில்பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய சமுதாய கூடம் appeared first on Dinakaran.