சேத்துப்பட்டு, செப்.3: காகித ஆலைக்கு விறகு ஏற்றி சென்ற லாரி, சேத்துப்பட்டு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து போளூர் அருகே காகித ஆலைக்கு விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு லாரி வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் நம்பேடு கிராமத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, புளியமரத்தில் மோதியது. பின்னர் அங்குள்ள வீட்டிற்குள் புகுந்தது.
இதில் வீட்டின் முன்பக்க சிமெண்ட் ஷீட் கூரை மற்றும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பூ வியாபாரியான ஏழுமலை(27), அவரது மனைவி சோனியா(22), தாய் ஜெயலட்சுமி(60), தந்தை கிருஷ்ணன்(65) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயத்துடன் கதறி துடித்தனர். அதேபோல் லாரியை ஓட்டி வந்த கடைசிகுளம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மோகன், கிளீனர் ஏழுமலை ஆகியோரும் படுகாயமடைந்தனர். பயங்கர சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அலறி எழுந்து வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post லாரி வீட்டிற்குள் புகுந்து தூங்கிய 6 பேர் படுகாயம் சேத்துப்பட்டு அருகே நள்ளிரவு பயங்கரம் காகித ஆலைக்கு விறகு ஏற்றிச் சென்ற appeared first on Dinakaran.