தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் அருகே மேலவெளி ஊராட்சியில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது. இந்த குளம் மிக பழமையான குளம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்ப்பிற்காக ஏலம் விடப்பட்டு முறையான பராமரிப்போடு இருந்தது. கோடைகாலம் ஆனாலும் வற்றாமல் எப்போதும் தண்ணீர் இந்த சிங்கப்பெருமாள் கோயில் குளத்தில் இருந்து கொண்டே இருக்கும். இப்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இக்குளத்தின் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகிக்க குளத்தின் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளம் மக்களின் நீர் ஆதாரமாய் விளங்குகிறது. இந்நிலையில் குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்திற்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் நிரப்பப்படும். இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மேலவெளி ஊராட்சிக்குட்பட்ட சிங்கபெருமாள் குளத்தில் நீரை நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேலவெளி ஊராட்சியின் நீராதாரமான சிங்கப்பெருமாள் குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.