×

ஆச்சாள்புரம் சாலையோரம் மின்மாற்றியை தாங்கி நிற்கும் சிதிலமடைந்த மின்கம்பங்கள்: உடனடியாக மாற்ற கோரிக்கை

 

கொள்ளிடம், செப்.2: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் ஆச்சாள்புரம் கிராமத்தில் சாலை ஓரத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த இந்த மின்மாற்றியிலிருந்து அப்பகுதியில் உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிக மின் சக்தியை கொண்டுள்ள இந்த மின்மாற்றியின் இரண்டு மின் கம்பங்களும் பழுதடைந்து முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இரண்டு மின் கம்பங்களிலும் உள்ள சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளே உள்ள துருபிடித்த கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின் கம்பங்கள் எந்த நேரமும் முறிந்து விழும் அபாய கட்டத்தில் இருந்து வருகிறது. காற்று சற்று பலமாக வீசும்போது மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு புதியதாக மின் மாற்றி அமைக்க வேண்டும்.

நெடுஞ்சாலை ஓரத்திலேயே இந்த மின்மாற்றி அமைந்துள்ளதால் சற்று ஒதுக்குப்புறத்தில் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆபத்தை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை புதிதாக அமைத்து தரவும், வேறு இடத்தில் மாற்றித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆச்சாள்புரம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஆச்சாள்புரம் சாலையோரம் மின்மாற்றியை தாங்கி நிற்கும் சிதிலமடைந்த மின்கம்பங்கள்: உடனடியாக மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Achalpuram road ,Kollidam ,Achalpuram ,Mahendrapalli ,Mayiladuthurai district.… ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது