×

3 சேவல்கள் திருட்டு: ஒருவர் கைது

ஆண்டிபட்டி, செப். 2:ஆண்டிபட்டி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (51). இவருக்கு சொந்தமான தோட்டம், எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் இருந்து அம்மச்சியாபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்கு 40 சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், குபேந்திரன் கடந்த ஆக.3ம் தேதி குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, 40 சண்டை சேவல்களில் 3 சேவல்களை காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்துபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 சண்டை சேவல்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து குபேந்திரன் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கோழிக்கடைகளில் தொடர்ந்து விசாரித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள ஒரு கோழி கடையில் மூன்று பேர் 3 சண்டை சேவல்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் குபேந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ரோசனப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜீத் (24), சுந்தரேசன், துரைச்சாமி என்பதும், குபேந்திரனது சேவல்களை திருடியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அஜீத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சுந்தரேசன், துரைச்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 சேவல்கள் திருட்டு: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Kubendran ,Weerachinnammalpuram ,Andipatti ,M. Subpulapuram ,Dinakaran ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...