×

துவரங்காடு அருகே வக்கீலை வெட்டி கொல்ல முயற்சி

பூதப்பாண்டி, செப்.2: துவரங்காடு அருகே பயங்கர ஆயுதங்களுடன் வக்கீலை வெட்டி கொல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற நண்பருக்கு காயம் ஏற்பட்டது. வடசேரி செட்டிக்குளம் சாம்பவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(28). நாகர்கோவில் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் பார்வதிபுரத்தை சேர்ந்த அந்தோணி தாஸ் (58) என்பவருக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதில் சுப்பிரமணிக்கும், அந்தோணி தாசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று துவரங்கோடு டாஸ்மாக் அருகே சுப்பிரமணி தனது நண்பரான வடசேரி மேற்கு கலுங்கடியை சேர்ந்த சங்கர் (27) என்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தோணி தாஸ் மற்றும் அவரது நண்பர்களான பூதப்பாண்டி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த அஜித் (25), திட்டுவிளை மத்தியாஸ் நகரை சேர்ந்த ஜினோ (28), சுடலை முத்து (28) ஆகியோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். இதையடுத்து திடீரென்று 4 பேரும் சேர்ந்து சுப்பிரமணியை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சங்கர் இதை தடுக்க முயன்றார்.

இதனால் சங்கரின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பல் சுப்பிரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இது குறித்து சுப்பிரமணி பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்தோணி தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தோணிதாஸ் மீது பூதப்பாண்டி, கோட்டாறு, வடசேரி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் அவரது நண்பரான அஜித் மீது பூதப்பாண்டி மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post துவரங்காடு அருகே வக்கீலை வெட்டி கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Tags : Duvarangad ,Bhootapandi ,
× RELATED பூதப்பாண்டி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்