×

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் பழுதானதால் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

பூந்தமல்லி: சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞசாலையில் திடீரென கனரக வாகனம் பழுதாகி நின்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி, பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பைக், கார், லாரிகள், பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். அதேபோல், சென்னை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்கள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், சின்னையன் சத்திரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் நேற்று காலை சென்று கொண்டிருந்த கனரக டிரக் ஒன்று திடீரென பழுதடைந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் சென்னை – பெங்களூர், பெங்களூர் – சென்னை என 2 மார்க்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சென்னை பெங்களூர் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் என ஏராளமான அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞசாலையின் நடுவே பழுதாகி நின்ற கனரக டிரக் வாகனத்தை 2 கிரேன்கள் மற்றும் பொக்லைன் இயந்திரன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் சீரானது.

The post சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் பழுதானதால் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai-Bangalore National Highway ,Poontamalli ,
× RELATED ஆம்பூர் அருகே விடிய விடிய பரபரப்பு...