×

சோமசுந்தரம் நகராட்சி பூங்கா சீரமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர், ஆக. 30: திருவாரூர் நகரில் ரூ.41 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்கா சீரமைக்கும் பணி அமைச்சர் நேரு உத்தரவின் பேரில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி மாவட்ட தலைநகராக இருந்து வருவதன் காரணமாக இங்குள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு வருபவர்கள், மத்திய பல்கலைகழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் என நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த நகரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பனகல் சாலையில் நகராட்சியின் சோமசுந்தரம் பூங்கா ஒன்று இருந்து வருகிறது. மாலை நேரங்களில் பொழுது போக்கும் ஒரே இடமாக இருந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் எவ்வித பராமரிப்பும் இல்லை. பூங்கா முழுவதும் புல் வெளிகள் மண்டி கிடந்தது. இந்த பூங்காவில் மனுநீதி சோழன் மணிமண்டபம் உள்ளது. நடைபயிற்சிக்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே பள்ளி குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் பொது மக்கள் நலன கருதி, சோமசுந்தரம் பூங்காவை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதற்கிடையே, நகராட்சியில் சோமசுந்தரம் பூங்காவானது தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிக்காக 4 புறமும் நடைமேடைகள், மழை நீர் வடிகால்கள் மற்றும் பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு பொது மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கடந்த மாதம்
13ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த 27ம் தேதி இந்த பூங்காவை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post சோமசுந்தரம் நகராட்சி பூங்கா சீரமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Somasundaram ,park ,Tiruvarur ,Somasundaram Park ,Municipal ,Dinakaran ,
× RELATED முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!