டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் கூடியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.
The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது appeared first on Dinakaran.