×

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தனது தலைமையில் வரும் 29-ம் தேதி தஞ்சை திலகர் திடலில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேகதாது பற்றி விவாதித்து மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “01.6.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத்தை மத்திய அரசு அறிவித்து, அதனை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. காவிரி நதிநீர் ஆணையம், மேகதாது அணை கட்டுவதற்கான பொருளை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது, டெல்டா பாசன விவசாயிகளிடம் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில், 29.2.2024 – வியாழக் கிழமை மாலை 4 மணியளவில், தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்களின் ஜீவாதார உரிமையை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தின் சார்பில் மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Danjay ,Caviri Management Commission ,Chennai ,Edappadi Palanisami ,Thanjai Tilagar Didal ,EU Water Resources Commission ,Dinakaran ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை...