×

ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து எலக்ட்ரிக்கல் கடை அதிபர் பலி

*3 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம் : ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது பர்லியாறு மரப்பாலம் அருகே கார் தடுப்புச்சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (32). இவரது மனைவி மம்தா (27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிரவீன்குமாரும், திருப்பூர் மாவட்டம் கரடிவாவி அடுத்துள்ள மல்லேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சாந்தாராம் (42) என்பவரும் சேர்ந்து அன்னூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தனர். இவர்களது நண்பர்கள் வேல்முருகன் (33), அமானுல்லா (45). வேல்முருகன் இதே பகுதியில் ஜவுளிக்கடையும், அமானுல்லா பேக் கடையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் காரில் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை சாந்தாராம் ஓட்டி வந்தார். பர்லியாறு மரப்பாலம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதியது. பின்னர் நிலைதடுமாறி ஓடிய கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி சத்தம் போட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது பின்னால் அமர்ந்திருந்த பிரவீன்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து எலக்ட்ரிக்கல் கடை அதிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Electrical Shop Chancellor ,Ootiki ,Badugayam Mattupalayam ,Oodi ,Barliaru Maravavalam ,Feeder ,Electrical ,
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...