×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!!

சென்னை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி என மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் வந்து மக்கள் நன்றாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை. மகாபலி சக்கர வர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.

கேரளம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகை  தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள், வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், கோயில்களில் செண்டை மேளம் முழங்கவும் வழிபாடு செய்து வருகின்றனர். சென்னையிலும் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். வணிகம் தொடர்பாகவும், வேலை சம்பந்தமாகவும் அதிக அளவில் இருப்பதால் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், இன்று சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் (29ம் தேதி) சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

அதே போன்று கோவை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக ஆக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 16-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார்.திருப்பூரில் இன்று (ஆகஸ்ட்29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து இதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட்29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Govai ,Tiruppur ,Nilgiri ,Kannyakumari ,Oonam ,Onam Festival ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!