×

வயலில் புதிதாக அமைத்த ஆழ்துளை கிணற்றில் பால்போல் வெள்ளை நிறத்தில் பெருக்கெடுத்த தண்ணீர்: செய்துங்கநல்லூர் அருகே பரபரப்பு

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அடுத்த கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் அருகே சேரகுளம் அடுத்த தீராத்திகுளத்தில் உள்ளது. இங்கு 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து கிடைக்க பெற்ற தண்ணீரை முதலில் கிணற்றில் விடுகிறார். பின்னர், கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் இறைத்து பயிரிட்டுள்ள வாழை, தென்னை, பருத்திக்கு தண்ணீர் பாய்த்து வந்தார். பருவமழை பொய்த்து போனதால் தற்போது தென்னை, பருத்தி மட்டும் சாகுபடி செய்துள்ளார். இதற்காக தினமும் தண்ணீரை இறைத்து தோட்டத்து வயலில் பாய்த்து வந்தார்.

இந்நிலையில் புதிதாக இரு ஆழ்துளை கிணறுகள் அமைத்தார். இதில் ஒரு ஆள்துளை கிணற்றில் மட்டும் பால்போல் தண்ணீர் வெள்ளை நிறத்தில் பெருக்கெடுத்து வந்தது. இதனால் வியப்புக்குள்ளான பால்பாண்டி, அருகே மற்றொரு விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை பார்வையிட்டார். அங்கு தண்ணீர் சரியாக வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக புதிதாக அமைத்த ஆழ்துளை கிணற்றில் இருந்து பால்போல் வெள்ளை நிறத்தில் பெருக்கெடுத்த தண்ணீர் கிணற்றில் விழுந்தது. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீர் அனைத்தும் வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளது.

இதுகுறித்து பால்பாண்டி கூறுகையில் ‘கடந்தாண்டும் 2 நாட்கள் ஆழ்துளை கிணற்றில் பால் போன்ற வெள்ளை நிறத்தில் தண்ணீர் வந்தது. பிறகு முறையாக மழை பெய்யாத நிலையில் இந்தாண்டும் தண்ணீர் பால் போல் வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளது. இது வறட்சிக்கான அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நிலையை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

The post வயலில் புதிதாக அமைத்த ஆழ்துளை கிணற்றில் பால்போல் வெள்ளை நிறத்தில் பெருக்கெடுத்த தண்ணீர்: செய்துங்கநல்லூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dundunnallur ,Dundungannallur ,Thoothukudi District ,Balpandi ,Seragulam ,DungNallur ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...