×

ஓணம் பண்டிகை விடுமுறை கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் கோடை விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் களை கட்டும். பொதுவாக சீசன் காலத்தை விடுத்து, சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிவது வழக்கம்.

இதுபோல கடந்த இருதினங்கள் விடுமுறை மற்றும் கேரளம், குமரியில் திருவோண பண்டிகை களைகட்டி வருவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கன்னியாகுமரி களை கட்டியது. சுற்றுலா பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சி மற்றும் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்பி எடுத்து கொண்டனர்.

அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் இட்டு, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் செய்தனர். மேலும் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று, டிக்கெட் வாங்கி பயணம் செய்து ரசித்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு புதிதாக சொகுசு படகு இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் விரும்பி பயணம் ெசய்ததோடு, காந்தி, காமராஜர் மணி மண்டபங்கள் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் கண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், இங்குள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோல கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜூகளும் நிரம்பின. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். ஓணப்பண்டிகை முடிந்தாலும், அடுத்து வரும் சில நாட்களுக்கு கேரள மக்கள் சுற்றுலா தலங்களில் குவிவார்கள் என்பதால் கன்னியாகுமரியிலும் கூட்டம் அதிகம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஓணம் பண்டிகை விடுமுறை கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kannyakumary ,Oonam ,Kannyakumari ,Oanam ,Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...