×

நாகர்கோவில் அருகே தேவாலய கூட்டத்தில் இரு தரப்பு தள்ளுமுள்ளு போலீஸ் குவிப்பு

 

நாகர்கோவில், ஆக.28: நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில் பங்கு பேரவை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரச்னை எதுவும் செய்யக் கூடாது என்று போலீசார் முன்னெச்சரிக்கை வழக்குகளும் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இந்த ஆலயத்தில் திருப்பலி முடிந்து ஆலய வளாகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆலய பங்கு தந்தையை முற்றுகையிட்டு தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். திருவிழா நடத்தக்கூடாது என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்த வேண்டும் என்றும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வரை சென்றதால் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

அப்போது போலீசாருடனும் சிலர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். திருவிழா நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என போலீசார் கூறினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

The post நாகர்கோவில் அருகே தேவாலய கூட்டத்தில் இரு தரப்பு தள்ளுமுள்ளு போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Asaripallam ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...