×

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு: கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு!

மதுரை: மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது இரும்பு பெட்டியில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் ரயில் பெட்டிகளில் இருந்து ரூ.200 கட்டுகள், ரூ.500 கட்டுகள் அடங்கிய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு: கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Tags : maduram ,Madurai ,Maduraya ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை